ஜனநாயக விழுமியங்களையும் பத்திரிகை சுதந்திரத்தையும் மதிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் உத்தரவிட வேண்டும் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கடிதம் எழுதியுள்ளது.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் கேதர்நாத் சுக்லா மற்றும் அவரது மகன் குரு தத் சுக்லாவிற்கு எதிராக போலியான ஃபேஸ்புக் கணக்கு மூலம் அவதூறு பரப்புவதாக மேடை நாடக கலைஞர் நீரஜ் குந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற கனிஷ்கா திவாரி மற்றும் ஒளிப்பதிவாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அத்துமீறி நுழைதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள கனிஷ்கா, “சட்டமன்ற உறுப்பினர் குறித்து ஏன் செய்தி வெளியிடுகிறீர்கள் என்று காவல்துறையினர் கேட்டதாக தெரிவித்துள்ளனர். பத்திரிகையாளர்களை காவல்துறையினர் காவலில் வைத்திருந்ததாகவும் சட்டமன்ற உறுப்பினர் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டால், நிர்வாணமான ஊர்வலம் அழைத்து செல்வோம் என்று காவல்துறையினர் மிரட்டியதாகவும் கனிஷ்கா திவாரி கூறியுள்ளார்.
கனிஷ்கா திவாரி, அவரது கேமராமேன் உள்ளிட்ட 8 பேர் உள்ளாடைகளுடன் நிற்பதை காவல்நிலையத்தின் பொறுப்பாளர் அபிஷேக் சிங் பரிஹார் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து எடிட்டர்ஸ் கில்டு உள்துறை அமைச்சகத்திற்கு எழுதி உள்ள கடிதத்தில்,"பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிரான காவல்துறையின் அத்துமீறலை அரசாங்க அறிந்திருக்க வேண்டும்.ஜனநாயக விழுமியங்களையும் பத்திரிகை சுதந்திரத்தையும் மதிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் உத்தரவிட வேண்டும். அதே சமயம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளது.
இஜிஐ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”ஏப்ரல் 2 தேதி, ஊடகவியலாளர், மனித உரிமை செயல்பாட்டாளர்களின் உடைகளை அகற்றி அவமானப்படுத்திய காவல்துறையின் நடவடிக்கை அதிர்ச்சியையும் சீற்றத்தையும் வரவழைத்தது” என தெரிவித்துள்ளது.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது மகன் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பதிவிட்ட மேடை நாடக கலைஞர் நீரஜ் குந்தர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் கனிஷா திவாரி மற்றும் அவரது கேமராமேனை காவல்நிலையம் அழைத்து சென்ற காவலர்கள் அவர்களின் உடைகளை அகற்றி அவமானப்படுத்தினர்.
சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து மத்தியபிரதேச முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், ”ஊடகவியலாளர்களை தாக்கும் காவல்துறையினரின் போக்கு மிகவும் கவலையளிக்கிறது. இது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்று எடிட்டர்ஸ் கில்ட் தெரிவித்துள்ளது.
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) மற்றும் இந்தியன் வுமன் பிரஸ் கார்ப் (ஐடபிள்யூபிசி) வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ”மத்தியபிரதேச மாநிலம், சீதி மாவட்டத்தில் ஊடகவியலாளர், மேடை நாடக கலைஞர் மற்றும் குடிமக்களின் உடைகளை அகற்ற உத்தரவிட்டு அவமானப்படுத்திய காவல்துறையின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் மீதான காவல்துறையினரின் அட்டூழியங்கள் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இது போன்ற சம்பவங்களில் பெரும்பாலானவை பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெற்றுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.